திரையிசை அமைப்பாளர்கள்:
தமிழ்த்திரையிசையின் முதல் இசையமைப்பாளர் காளிதாஸ் படத்தின் பாடல்களை இயற்றிய மதுரகவி பாஸ்கரதாஸ் ஆவார்.
பிறகு துவக்க காலத்தின் புகழ்மிக்க இசையமைப்பாளராக கர்நாடக இசையுலகின் பிதாமகர்களுள் ஒருவரான பாபநாசம் சிவன் விளங்குகிறார். அங்கிருந்து துவங்கி 1976 வரை முதன்மையாக கர்னாடக இசையையே தங்கள் அகத்தூண்டுதலாகக் கொண்ட இசையமைப்பாளர்களைத் தமிழ்த்திரையிசை பெற்றிருக்கிறது. திரையிசையமைப்பாளர்களின் அகத்தூண்டல் குறித்த T. செளந்தரின் கட்டுரையில் இதனை விரிவாகக் காணலாம் (1).
இக்காலகட்டத்தின் இசைக்கலைஞர்களை இரு வகையினராகப் பிரிக்கலாம். கர்னாடக இசையுலகில் புகழ் பெற்று தமிழ்த்திரையிசையில் பங்குபெற்றவர்கள். கர்னாடக இசையில் பயிற்சி பெற்றும், அதன் தாக்கத்திலும் ஆனால் முதன்மையாகத் தமிழ்த்திரையிசை இயக்குநர்களாகவே விளங்கியவர்கள். இரு வகைகளிலும் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
பாபநாசம் சிவன் துவங்கி எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜி.என்.பால சுப்ரமணியம், டி.கே பட்டம்மாள், வீணை பாலச்சந்தர் உள்ளிட்ட கர்னாடக இசைக்கலைஞர்களும் தமிழ்த்திரையிசையில் பங்குபெற்றவர்கள். போலவே சி.ஆர். சுப்புராமன் துவங்கி ஜி.ராமநாதன், கேவி, மகாதேவன், விசுவநாதன்-ராமமூர்த்தி என அனைவரும் கர்னாடக இசையில் மேதமையும், கர்னாடக இசையை அகத்தூண்டலாகவும் முதன்மையாக திரையிசைமைப்பாளர்களாகவும் விளங்கியவர்கள்.
இப்போது இதனை மேற்கோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். ஹாலிவுட்டின் முதல் திரையிசைமைப்பாளராகக் கருதப்படுபவர் King Kong படத்தின் இசையமைப்பாளரான Max Steiner. அவரில் துவங்கி மேற்கிலும், நவீன மேற்கத்திய இசையின் முக்கிய கலைஞர்களான profokiev, Dimitry Shostakovitch போன்றவர்கள் திரையிசையமைப்பாளர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள். இதில் Schoenbergன் பணி முக்கியமானது. ஒரு புறம் அவரது atonatlity இசை மேற்கிசையின் தேக்கத்திற்கு வித்திட்டாலும், நவீன மேற்கிசையின் மிக முக்கியமான கோட்பாட்டாசிரியர் (theorist) அவரே. உலகப்போரின் சமயத்தில் நாஜி சிக்கலால், அமெரிக்கா வந்து இசை ஆசிரியராகப் (UCLA) பணியாற்றுகிறார் Schoenberg. Bernard Herrmann துவங்கி இன்றைய John williams வரை பல்வேறு அமெரிக்க திரையிசையமைப்பாளர்கள் மேற்கத்திய செவ்விசையை மையமாகக் கொண்டவர்கள்.
ஆக மேற்கிலும் கிழக்கிலும் திரையிசை செவ்விசையின் நீட்சியாகவே துவங்கியிருக்கிறது, வளர்ந்திருக்கிறது. திரைப்படம் எனும் கலை சென்ற நூற்றாண்டில் வளர்ந்த கலை. ஆனால் அதில் இடம் பெறும் இசை பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்த கலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முக்கியமாக தமிழ்த்திரைப்படங்களின் தரத்தை கொண்டு தமிழ்த்திரையிசையின் தரத்தை குழப்பிக் கொள்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். திரைப்படம்தான் தமிழில் தட்டுத் தடுமாறி வளரும் கலை. ஆனால் தமிழ்த்திரையிசையின் நிலை அதுவல்ல.
துவக்கத்திலிருந்தே அமெரிக்காவில் ஐரோப்பிய செவ்விசை பாதிப்பு போக, அங்கே இயங்கிய பல்வேறு இசையியக்கங்களிலிருந்தும் குறிப்பாக Jazz, Rock, Pop போன்றவற்றை முதன்மையான அணுகுமுறையாகக் கொண்ட இசையமைப்பாளர்கள் தோன்றுகிறார்கள். இவ்வாறு பல்வேறு இசை வகைமைகளிலிருந்து வரும் இசையமைப்பாளர்களை, மேற்குலகம் அணுகும் விதத்திலிருந்து நாம் கீழுள்ளவற்றைப் பெற்றுக் கொள்ள வேணடியது அவசியமாகிறது (அங்கிருந்து எடுத்துக் கொள்ளாமல் நாமாகவே யோசிக்கலாம். ஆனால் நமக்கு மேற்கு சொன்னால் தான் சரியாகத் தோன்றும்)
1. திரையிசை என்பது ஒட்டுமொத்தமாக வெகுஜன இசையோ, எளிய இசையோ ஆகாது. ஏனென்றால் திரையிசையில் செவ்விசை இயக்கங்களுக்கு இணையான இசையும் இடம்பெறுகிறது. எனவே பொத்தாம் பொதுவாக திரையிசையை வெகுஜன பரப்பிசை என்று சொல்வது சரியாகாது.
2. திரையிசையில் இயங்கும் அனைத்து இசையமைப்பாளர்களையும் ஒரே தளத்தில் வைக்க முடியாது. இங்கே தளம் என்று சொல்வது உயர்வு தாழ்வு கருதியல்ல. Herrmann மற்றும் Knopfler ஆகிய இருவரும் திரையிசையமைப்பாளர்கள் ஆனாலும், முற்றிலும் வேறுபட்ட இசையமைப்பாளர்களாகவே பார்க்க முடியும். ஏனெனில் இவர்களை ஒப்பிடுவது அடிப்படையில் செவ்விசையையும், ராக் இசையையும் ஒப்பிடுவதே ஆகும். செவ்விசை பாணி இசையமைப்பாளர்களில் கூட மாபெரும் வேறுபாடுகள் உள்ளன. திரையிசையில் இயங்கும் இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இசை அணுகுமுறை, இசை தத்துவம், பாதிப்புகள் கொண்டவர்கள். எனவே திரைப்படங்களில் இயங்கும் அனைவரையும் திரையிசையமைப்பாளர்கள் என்ற ஒற்றைப் பார்வையில் மதிப்பிட முடியாது.
தமிழ் திரையிசையின் பங்களிப்பு
இன்று மேற்கில் திரையிசை குறித்த எதிர்மறை மதிப்பீடுகள் இந்த ஒன்றைத் தான் மிகமுக்கியமான விமர்சனமாகக் கொண்டுள்ளன. ஒரு இசைத்துறையாக திரையிசையின் பங்கு என்ன? திரையிசை ஒரு இசையியக்கமாக இசையின் நுட்ப வளர்ச்சிக்கோ, புதிய சிந்தனைக்கோ என்ன இடமளித்திருக்கிறது என்பது கேள்வியாகிறது. இதனை மையமாகக் கொண்டு திரையிசையை வெறும் Applied Art என்று ஒரு சாரார் குறைத்து மதிப்பிடுகிறார்கள். மற்றொரு சாரார் இதனை மறுக்கிறார்கள்.
முதலில் இந்த Applied Art அதாவது திரையிசை செவ்விசையிலிருந்து எடுத்துக் கொள்கிறது எனபதே வலுவற்ற வாதமாகிறது. ஏனெனில் செவ்விசையே காலம் காலமாக அதைத்தான் செய்கிறது. தனது முந்தைய காலத்திலிருந்தும், பிற இசையியக்கங்களிலிருந்தும் செவ்விசை எப்பொழுதுமே இசையைப் பெற்றுக் கொண்டே வளர்ந்திருக்கிறது. முற்றிலும் புதிய இசைச்சிந்தனைகளை உருவாக்கியவர்களே உண்மையாகப் பங்களித்தவர்கள் என்று நாம் கணக்கெடுத்தால் செவ்விசையிலும் எத்தனை பேர் தேறுவார்கள் என்பது சந்தேகமே. இருந்தாலும் திரையிசை வேறு எந்த பங்களிப்பையும் செய்யாமல் பிற இசையியக்கங்களின் இசை நுட்பங்களை எடுத்துக் கொள்ள மட்டும் செய்கிறதா என்பது பார்க்க வேண்டிய ஒன்று.
மேற்கிலாவது திரையிசை வெறும் பின்னணி இசையாக, செயல்பாட்டு இசையாக (Functional music) விளங்குகிறது என்று கொள்ளலாம் (இருப்பினும் மேற்கிலும் திரையிசையின் தனித்துவமான பங்களிப்புகள் உள்ளன). ஆனால் முன்னரே பார்த்தது போல இசைக்கான வலுவான தளம் அமைந்த நமது திரையிசையை வெறும் Applied Art என்று சொல்ல முடியுமா?
இதனை அணுகுவதற்கு, நம் தமிழ்த்திரையிசையில் இளையராஜாவிற்கு முன்பான காலகட்டத்தை இருவகையாகப் பிரிக்கலாம்.
மரபு கர்னாடக இசைக் காலம்:
இக்காலத்தை பாபனாசம் சிவன் துவங்கி, ஜி.ராமநாதன் காலம் வரை என்று வைத்துக் கொள்ளலாம். இக்காலத்தை பெரும்பாலும் மரபு கர்னாடக இசையே திரையிசையாக வெளிப்பட்ட காலமாகக் கொள்ளலாம்.
தமிழ்த்திரையிசைப் பாடல்கள் கீர்த்தனையின் தொடர்ச்சியாக, முழுக்க கர்னாடக இசையின் அடிப்படையிலும், கீர்த்தனை போலவே, ராகத்தின் தேவைகளையே மைய நோக்கமாகக் கொண்டதாகவும் அமைகின்றன. இப்படி நேரடியாக கர்னாடக இசை வழங்கப்பட்ட காலமாக இருந்தாலும் இக்காலகட்டத்திலும் ஒரு முக்கியமான பங்களிப்பு இசைக்கு வெளியே நடந்தது. சாதியசிக்கல்களிலின்றி, வர்க்க பேதங்கள் இன்றி அனைவருக்கும் இசை சென்று சேரத்துவங்கியது இக்காலத்தில்தான். திரைப்படம் எனும் நவீன கலையின் சாத்தியத்தால் நேர்ந்த முதல் வெற்றி இது.
“Light Music” காலம்:
ஆனால் அடுத்த நிகழும் எம்.எஸ்.வி அவர்களின் காலம் தமிழ்த்திரையிசைக்கு மட்டுமல்ல, மாறாக தமிழிசையின் மிக முக்கியமான காலகட்டம் எனலாம். இதன் தொடக்கம் அதன் முந்தைய ஜி.ராமநாதன் காலகட்டத்திலிருந்தே ஆரம்பிக்கிறது.
தமிழ்த்திரையிசை ஆரம்பத்தில் மரபான இசையாக ஒலித்ததற்கு ஏற்றவாறு தமிழ்த்திரைப்படங்கள் புராணங்களையே திரைப்படங்களாக்கிக் கொண்டிருந்தன. இவற்றிற்குத் தேவையான காவிய உணர்வுகளை கர்னாடக இசையிலிருந்தே பெற்று இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள். ஆனால் புராண காலத்திலிருந்து திரைப்படம் சமகாலத்திற்கு நகரத் துவங்கியது. இது இசையில் புதிய சிக்கலை உருவாக்குகிறது.
ஏனென்றால் கர்னாடக இசையில் சமகாலத்திற்கான இசைமொழி கிடையாது.
கர்னாடக இசை, இருபதாம் நூற்றாண்டில் தன்னை முழுக்க முழுக்க பக்திசார் இசையாகச் சுருக்கிக் கொள்கிறது. இதன் மூலம் தன்னை எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாத இசையாக மரபான அழகியலையே கொண்டிருக்கிறது. உதாரணமாக மேற்கத்திய செவ்விசையின் அழகியலை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு அழகியலைக் கொண்டது. Baroque கால இசை Polyphonic நயம் வாய்ந்தது. Classical கால இசையோ வடிவ நேர்த்தியைக் கொண்ட Homophonic நயம். பிறகு Romantic கால இசை மிகு உணர்ச்சியாலானது. Wagner மூலமாக நவீன இசை மொழி தொடங்கி இருபதாம் நூற்றாண்டில் மாற்றமடைகிறது. இதனோடு ஒப்பிட்டால் கர்னாடக இசையோ தனது அழகியலில் காலத்திற்கான மாற்றங்களைச் சந்திக்கவில்லை.
ஆரம்பத்திலிருந்தே இப்படியா என்றால் நிச்சயம் இல்லை என்று சென்ற பகுதிகளில் பார்த்திருக்கிறோம். கர்னாடக இசையின் இக்கால வடிவம், இருநூறு-முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு இசைப்பண்பாடுகளின் சங்கமத்தால் உருவானது என்று பார்த்தோம். கர்னாடகச் இசை அக்காலத்தில் பல்வேறு இசையியக்கங்களிடமிருந்து பெற்றிருக்கிறது. அக்காலத்தில் இங்கிருந்த வெளிநாட்டவரின் இசையின் பாதிப்பில், கர்னாடக இசையில் மேற்கத்திய சுவரங்களைப் போல மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் நோட்டு சுவர கீர்த்தனைகள் கூட அமைத்துள்ளார். மேலும் கர்னாட்க இசை அக்காலத்தில் முழுக்க பக்தி இசையும் கிடையாது. இதனை உ.வெ.சா அக்கால கர்னாடக இசை குறித்து எழுதுவதைக் கொண்டு பார்க்கலாம்.
ஆனால் கர்னாடக இசை சபைகளைத் துவங்கி, இசையரங்கில் நுழைந்து தன்னை தனி அமைப்பாக்கிக் கொள்ளும் போது பக்தி இசையாகவும், தூய மரபிசையாகவும் நிறுவிக் கொள்கிறது. ஆக சென்ற நூற்றாண்டில் தான் கர்னாடக இசை புனிதத்தன்மையையே அதன் மைய அடையாளமாகக் கொள்கிறது. இதன் விளைவு கர்னாடக இசை முழுமையாக மரபுக்குள் சிக்கி எந்த காலமாற்றத்தையும் சந்திக்காமல் இருப்பதே. நிகழ்காலத்திற்கான பெரிய அளவிலான இசைநுட்ப, இசைவடிவ, அழகியல் மாற்றங்களையும் கர்னாடக இசை சந்திக்கவேயில்லை.
மரபைப் பேணிப் பாதுகாப்பதும் அவசியம்தான். ஒரு இசையியக்கம் தன்னை மரபிசையாகவோ, பக்தியிசையாகவோ எவ்வாறு எடுத்துச் செல்ல விரும்புகிறது என்பதை தீர்மானிக்கும் உரிமை அதற்கே உண்டு என்று கூட வைத்துக்கொள்வோம். மேலும் தனக்கென ரசிகர் சந்தையை பெற்றிருக்கும் கர்னாடக இசை மாறுவதற்கான தேவையும் இல்லை. ஆனால் சிக்கல் என்னவென்றால் பண்களும், ராகங்களும், தாளங்களும் என இந்திய, தமிழ் இசையின் பல நூறு ஆண்டுகளின் தொடர்ச்சி, கர்னாடக இசையோடு சேர்ந்து மரபுக்குள் மட்டும் சிக்கியிருப்பதே ஆகும். கர்னாடக இசையோடு சேர்த்து இந்திய, தமிழ் இசையின் மூலப்பொருட்களும் எந்த காலமாற்றத்தையும் எதிர்கொள்ளாமலிருப்பது இசையின், இசைச்சிந்தனையின் தேக்க நிலைக்கே வழி வகுக்கும். ஒரு பிரதேசத்தின் செவ்விசை இயக்கமே அப்பிரதேசத்தின் இசையறிவின் தொகுப்பாகும். ஒரு பிரதேசத்தின் செவ்விசை இயக்கத்தின் தேக்கம் அதன் இசைச்சிந்தனையின் வீழ்ச்சிக்கே வழி வகுக்கும். சங்க இலக்கியங்களும், கம்பனும் முக்கியம்தான். ஆனால் மொழி அதனோடு தேக்கமடையாமல் வளர வேண்டிய அவசியத்தைப் போலவே, இசைக்கும் பாரதியைப் போன்ற காலமாற்றம் அவசியமானது.
இங்கே மேற்கில் Wagner செய்ததை நினைவு கூற வேண்டும். Wagnerக்கு முற்பட்ட காலத்தின் இசைமொழி தூய தொனியியல் சார்ந்தது. அக்காலத்தின் இசை பெரும்பாலும் Scale based Harmonyஇல் அமைந்திருக்கும். நமது இசையோடு ஒப்பிடுவதானால் ஒரு பாடல் ஒரு ராகத்திற்குள்ளும், ராகத்தின் சுவரங்களுக்குள் அமைவதைப் போல (ஒரு ஒப்பீடே தவிர அடிப்படையில் வேற்பாடுகள் உள்ளன). Wagnerக்கு உருவாகிய தேவை என்பது நாடகத்தின் மாறிக் கொண்டே இருக்கும் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கும், அவருக்குத் தேவைப்பட்ட அதீதமான இசையனுபவத்திற்கும், ஒற்றை Scaleக்குள் சிக்கிக் கொள்வதும், அதன் பழகிப்போன அழகியலும், ஓசையும், கட்டுபாடுகளும் பெரிய தடையாக இருந்தன. எனவே அவர் இசையை ஏழு சுவரங்கள் கொண்ட Diatonic இசையிருந்து அதன் உப சுரங்களான 12 சுவரங்களையும் சேர்த்து Chromatic இசையாகப் பயன்படுத்துகிறார். மறுபடியும் மேலோட்டமான ஒப்பீட்டிற்குச் சொல்வதானால் ராகத்திற்குள் நிற்காமல் சுரங்களைப் பயன்படுத்துகிறார். இதன் மூலமாக இசையின் அழகியலில் மாற்றங்களை உருவாக்குகிறார். இந்த அழகியலுக்கான இசைநுட்ப அடிப்படைகள் அவரது இசையில் தோன்றுகின்றன. Wagner மூலமாகத் துவங்கி, serialism, Atonality, Neo-Riemannian theory, Hindemithஇன் chromatic theory உள்ளிட்ட நவீன இசையின் அனைத்து சிந்தனைமுறைகளும் Wagner துவக்கமாக நேர்ந்தவை. ஆம் இவற்றில் சில படுதோல்வியை சந்தித்தன என்றாலும் இன்று சந்தேகமின்றி மேற்கத்திய செவ்விசை நவீன யுகத்திற்கான அழகியலையும், இசை நுட்பத்தையும் உருவாக்கியுள்ளது.
ஆனால் இன்று மேற்கத்திய செவ்விசையில் Contemporary western classical music என்பதைப் போல, இங்கே Contemporary Carnatic music என்று ஒன்று இல்லை.
நவீன் யுகத்தை எதிர்கொள்ள வேண்டிய சிக்கலோ, தேவையோ கர்னாடக இசைக்கு இல்லாத போது, தமிழில் திரைப்படம் எனும் நவீன கலை, பெரும் திரளான பொதுமக்களிடம் சென்று சேர வேண்டிய கலை, தான் சந்திக்கின்ற மாற்றங்களின் மூலம், கர்னாடக இசை சார்ந்த இசையமைப்பாளர்களுக்கு இந்த காலமாற்றத்திற்கான சிக்கலை உருவாக்குகிறது, வாய்ப்பை அளிக்கிறது. இதனை ஏற்றுக் கொண்டு இசையமைத்த ஜி.ராமநாதனில் துவங்கி எம்.எஸ்.வி மூலமாக தமிழில் நவீன இசை மொழி உருவாகிறது. இதற்கான முதல் முயற்சிகள் ஜி.ராமநாதனில் துவங்கினாலும், எம்.எஸ்.வி அவர்களே நவீனத் தமிழிசையின் ஊற்றுக்கண் எனலாம்.
இதற்கான தூண்டுதலாக தங்களது கலையாற்றலின் மூலமும், ஹிந்தி திரையிசையிலிருந்தும்,மேற்கின் அக்கால இசையியக்கங்களிலிருந்து எடுத்துக்கொண்டும், ஒரு நவீன அழகியலை உருவாக்கியதின் மூலம் தமிழிசையில் ஒரு முக்கியமான திருப்பத்தை எம்.எஸ்.வி-ராமமூர்த்தி காலம் துவக்கி வைக்கிறது. தமிழ்த்திரையிசையில் இக்காலகட்டத்தில் கர்னாடக இசையைக் கடந்தும் பல்வேறு புதிய இசை முயற்சிகள் தோன்றி விட்டன். நாட்டுப்புற இசையும், மேற்கத்திய பாப், ராக் அண்ட் ரோல் உள்ளிட்ட பல்வேறு முயற்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் தமிழ் இசையின் மைய நீரோட்டம் கர்னாடக இசையாகவே இருந்திருக்கிறது. நவீன காலத்தின் தேவைகளுக்குத் தகுந்தவாறு அதே வேளையில் கர்னாடக இசையினை அடித்தளமாகக் கொண்டு இந்த மாற்றத்தை நமது இசைமரபின், அழகியிலின் தொடர்ச்சியாகச் செய்கிறார் எம்.எஸ்.வி. தமிழின் செவ்விசைத் தொடர்ச்சியும், அதன் நவீன முகமும் என எம்.எஸ்.வியின் இசை தமிழ் மக்களை எவ்வாறு கவர்ந்தது என்பது சொல்ல வேண்டியதில்லை.
இக்காலகட்டத்தின் மூலம் தமிழின் முதன்மையான, உயிர்ப்பான இசையியக்கமாக தமிழ்த்திரையிசை தன்னை நிறுவிக்கொள்கிறது.
துரதிர்ஷ்டவசமாக இக்காலத்தின் இசையை நாம் வெறும் மெல்லிசை என்கிறோம். தமிழில் மென்மையான இசை என்று ஒரு சாதகமான தொனி தோன்றினாலும், அடிப்படையில் இந்த Light Music என்பது இக்காலத் திரையிசையை குறைத்து மதிப்பிடும் நோக்கத்தைக் கொண்டதே. ஒருவேளை இது மேற்கில் நடந்திருந்தால் தமிழ்த்திரையிசையின் இக்காலகட்டத்தை மேற்கில் Progressive Carnatic இசை என்றே வகைப்படுத்தியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது. அதுவே சரியும் கூட. ஏனெனில் தமிழ்த்திரையிசையில் எம்.எஸ்.வி அவர்களால் துவங்கிய நவீன இசைமொழி என்பது ஒரு முக்கியமான கலைநிகழ்வு. ஆம் இதில் எளிமைப்படுத்தல்கள் இருக்கலாம். ஆனால் ஒரு மரபு இசைமொழியை அதன் போதாமையினால் நவீனப்படுத்த முயன்றதும் அதன் மூலம் பரவலான மக்களுக்கு எடுத்துச் சென்றதும் மகத்தான சாதனையே. தமிழ்த்திரையிசையின் ஆதார சுருதி என்று இளையராஜா எம்.எஸ்.வியைக் குறிப்பிடுவது இதன் பின்னணியிலேயே. தமிழிசையின் நவீன முகம் எம்.எஸ்.விக்குக் என்றும் கடன்பட்டது.
எம்.எஸ்.வியின் நவீனம் சார்ந்த முயற்சிகள் குறித்து S.சுரேஷின் இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம் (2).
“Neither film music nor fusion contribute to Karnatik music. You contribute by being in Karnatik music as a musician or listener…. The internal aesthetics of the music are disturbed wheren its sound is altered on the basis of an external influence..”
மேலுள்ள கருத்துக்களை சொல்வது ஒரு பழம்பெருமை பேசும் கர்னாடகக் கலைஞர் அல்ல. மாறாக இத்தகைய “முற்போக்கு” கருத்துக்களுக்காக Magsasay விருதைப் பெற்ற TM.கிருஷ்ணா (A Southern Music – The Karnatik Story புத்தகத்திலிருந்து).
திரையிசையை நிராகரிக்க எல்லா உரிமைகளும் கர்னாடக இசையுலகத்திற்கு உள்ளது. ஆனால் இங்கே TMK கர்னாடக இசைக்கு வேறு எந்த இசையும் பங்களிக்கவே முடியாது என்று தீர்ப்பளிக்கிறார். பக்கம் பக்கமாக கர்னாடக இசையியக்கத்தின் வரலாற்றை எழுதும் அவருக்கு, கர்னாடக இசை பல்வேறு இசையியிக்கங்களிலிருந்து பெற்றுத்தான் இந்த வடிவத்தை பெற்றுள்ளது என்பது தோன்றாமல் போவது நகைப்புக்குரியது. TM கிருஷ்ணாவை இங்கே குறிப்பிடக் காரணம், இன்று மக்களுக்கு கர்னாடக இசையை எடுத்துச் செல்பவராக அவருக்கு கிடைத்துள்ள பாராட்டும் மதிப்பும் தமிழ்த்திரையிசைக்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டியதே. தமிழ்திரையிசையே கர்னாடக இசையைக் கொண்டு, அதற்கு நவீன வடிவம் அளித்து அதனை பெரும் திரளான மக்கள் கூட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இதனை தமிழ்த்திரையிசை 1940-1970 காலகட்டத்திலேயே செய்துவிட்டது.
கலை அதுவும் இசையெனும் மகத்தான கருவியைக் கையில் வைத்துக் கொண்டு, அதில் எந்த மாற்றத்தையும் குறித்த சிந்தனையின்றி செய்யப்படும் எந்த முயற்சியும் இசையை மக்களிடம் எடுத்துச் செல்லாது. மக்களைச் சென்றடைய வேண்டும் என்று விரும்பிய, தேவையிருந்த தமிழ்த்திரையிசை தனது அழகியலில் மாற்றத்தைச் சந்திக்கிறது, மக்களின் மொழியில் பேசுகிறது, மக்களின் வாழ்க்கையையும், உணர்வுகளையும் பேசுகிறது. எனவே மக்களின் முதன்மையான இசையியக்கமாக மாறியிருக்கிறது.
இதுவரையில் நாம் இளையராஜாவின் காலத்திற்கு முன்பான திரையிசையின் பங்களிப்பைக் குறித்தே பார்த்துள்ளோம்.
தமிழ்த்திரையிசை மரபான கர்னாடக இசையாகத்துவங்கி ஆனால் பரவலாக மக்களிடம் சென்றடைந்து, பிறகு எம்.எஸ்.வி மூலமாக நவீனமடைந்து தமிழின் முதன்மையான, உயிர்ப்பான இசையியக்கமாகிறது. ஆனால் 1976ல் துவங்கி நிகழ்ந்து கொண்டிருக்கும் இளையராஜா எனும் இசையியக்கம், இளங்கோவும், தேவாரமும், கர்னாடக இசையும் என தமிழின் நீண்ட இசைவரலாற்றின் பொற்கால நிகழ்வுகளுக்கு இணையானது.
தொடர்புடைய இணைப்புகள்:
2.http://sureshs65music.blogspot.in/2015/07/msv-his-music-and-his-times.html
Leave a Reply